தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது தொடர்பாக, அதிமுக பிரமுகர்களான கணவன், மனைவி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, 49வது வார்டு வாக்குச்சாவடியில் நுழைந்து திமுக பிரமுகரை தாக்கியது, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த அவர், ராயபுரம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். அதன்படி, கடந்த 3ம் தேதி கையெழுத்து போட்டுவிட்டு, ராயபுரம் புது மேம்பாலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.
அங்கு, அவரை வரவேற்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்பதில் 2 கோஷ்டிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் வண்ணாரப்பேட்டை, அபராஞ்சிபுரம் 49வது வார்டு இணை செயலாளர் ஜெயாமதியை (34), அம்மா பேரவை பகுதி செயலாளர் சதீஷ்குமார், அவரது மனைவி ஜெயமாலினி ஆகிய இருவரும் அவதூறாக பேசியதுடன், செருப்பால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி ஜெயாமதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன், ராயபுரம் போலீசார் 5 பிரிவுகளில் சதீஷ்குமார், ஜெயமாலினி மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.